தோ.தெ.திருமலை நினைவு பரிசுகள் & விருதுகள் வழங்கும் விழா, சென்னை தி.நகர், தக்கர் பாபா வித்யாலயத்தில் 26.10.2009 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு, புகழ்மிகு காந்தியத் தலைவர் பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் தலைமை வகித்தார்; மாணவர்களுக்குப் பரிசுகளையும் வழங்கினார்.
காந்திய மாமணி தோ.தெ.திருமலை நினைவாக ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்குக் காந்தி தொடர்பான தேர்வுகளைக் காந்தி கல்வி மையம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு காந்தியின் 'சத்திய சோதனை' புத்தகத்தைத் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு அளித்தது. அதனைப் படித்தபின் மாணவர்களுக்கு 31.8.2009 அன்று அந்த நூல் தொடர்பான தேர்வினை நடத்தியது. அதில் 16,243 மாணவர்கள் கலந்துகொண்டனர். இவற்றுள் சிறப்பாகப் பதில்களை அளித்த 13 மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பெற்றன. இந்தப் போட்டிக்கு அதிக மாணவர்களை அனுப்பிய பள்ளிகளுக்கும் கேடயங்கள் வழங்கப்பெற்றன.
இந்த நிகழ்வில் குறும்பட இயக்குநர் பி.சிவகுமார், தக்கர் பாபா வித்யாலயத்தின் செயலாளர் வி.கே.ஸ்தாணுநாதன் ஆகியோருடன் நானும் (அண்ணாகண்ணன்) கலந்துகொண்டேன்.
நான் என் உரையில், சத்தியத்தைப் பின்பற்றுவதில் காந்தி கொண்ட உறுதியை - பிடிவாதத்தை எடுத்துரைத்தேன். அவரது தோற்றமே எப்படி ஒரு செய்தியைச் சொல்கிறது என்பதைச் சுட்டிக் காட்டினேன். 21 நாள் தொடர்ச்சியான உண்ணாவிரதம் இருந்ததைப் போன்று ஒவ்வொரு முறையும் தம் உயிரைப் பணயம் வைத்து, சிக்கல்களைத் தீர்த்த தீரத்தைப் போற்றினேன். அவர் வழிகாட்டுதலை மீறி, மக்கள் வன்முறையில் ஈடுபட்ட போது, அதற்குத் தாமே பொறுப்பு ஏற்று, அதற்குத் தண்டனையாக 3 நாள் உண்ணாவிரதம் இருந்த உயர்ந்த தலைமைத்துவத்தைப் பாராட்டினேன். அவர் வலியுறுத்தியபடி இந்தியாவைப் பிரிக்காதிருந்தால், இன்றைய அநேக சிக்கல்களைத் தவிர்த்திருக்கலாம் என்பதையும் கோடிட்டுக் காட்டினேன்.
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், தீபாவளிப் பண்டிகையின்போது இரண்டே நாளில் ரூ.220 கோடிக்குத் தமிழ்நாட்டில் மது விற்பனை நிகழ்ந்து சாதனை படைக்கப்பட்டிருப்பது குறித்து, அவர் வேதனை தெரிவித்தார். காந்தியின் வழிகாட்டுதல்படி நடக்க வேண்டும் என்பதை அழுத்தமாக வலியுறுத்தினார்.
பி.சிவகுமார், காந்தி தொடர்பான தம் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
இந்த நிகழ்வுக்குக் காந்தி கல்வி மைய இயக்குநர் அ.அண்ணாமலை, தலைவர் என்.டி.இராதாகிருஷ்ணன், செயலாளர் எஸ்.பாண்டியன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
முந்தைய செய்தி: தோ.தெ.திருமலை நினைவு பரிசுகள் & விருதுகள் வழங்கும் விழா
இந்த நிகழ்வு தொடர்பான தினமணி, தினகரன் செய்திகளை இங்கே இணைத்துள்ளேன். அந்த இதழ்களுக்கு நன்றி.
அண்ணாகண்ணன் வெளி
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Tuesday, October 27, 2009
காந்திய விழாவில் பங்கேற்றேன்
Posted by அண்ணாகண்ணன் at 4:06 PM 0 comments Links to this post
Labels: கல்கி, காந்தி, நிகழ்வுகள், மாணவர்கள்
Friday, October 23, 2009
தோ.தெ.திருமலை நினைவு பரிசுகள் & விருதுகள் வழங்கும் விழா
தோத்தாத்திரி தெய்வநாயகம் திருமலை என்பதன் சுருக்கமே, தோ.தெ.திருமலை (1921-1993); இவரை டி.டி.திருமலை என்றும் அழைப்பர். இவர், காந்தியத் தொண்டர். 1942இல் கல்லூரியில் படித்தபோது, காந்தியின் அழைப்பை ஏற்று, கல்லூரிப் படிப்பைத் துறந்து, 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் சேர்ந்தார். இந்திய விடுதலைக்குப் பிறகு, திருவில்லிபுத்தூர் நகராட்சியில் துணைத் தலைவராகச் சிறிது காலம் இருந்தார். பின்னர், மதுரையில் 1969இல் காந்திய தத்துவ பிரசாரகர் ஆக நியமிக்கப்பெற்றார். அப்போது காந்தியைப் பற்றிக் கற்பிக்கும் நோக்குடன், 'காந்தியின் வாழ்வும் வாக்கும்' என்ற தலைப்பிலான பாடங்களுடன் தொலைதூரக் கல்வி மையத்தைத் தொடங்கினார். டி.கே.சி., அ.சீ.ரா., ஜஸ்டிஸ் மகராஜன் உடன் தோ.தெ.திருமலை நெருங்கிப் பழகியவர்; காந்தி கல்வி நிலையப் பணிகளுடன் கலை - இலக்கியப் பணிகளையும் மேற்கொண்டு வந்த இவர், தம் 72ஆம் வயதில் மறைந்தார்.
இவர் நினைவாக ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்குக் காந்தி தொடர்பான தேர்வுகளைக் காந்தி கல்வி மையம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு காந்தியின் 'சத்திய சோதனை' புத்தகத்தைத் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு அளித்தது. அதனைப் படித்தபின் மாணவர்களுக்கு 31.8.2009 அன்று அந்த நூல் தொடர்பான தேர்வினை நடத்தியது. அதில் 16,243 மாணவர்கள் கலந்துகொண்டனர். இவற்றுள் சிறப்பாகப் பதில்களை அளித்த 13 மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பெறுகின்றன. இந்தப் போட்டிக்கு அதிக மாணவர்களை அனுப்பிய பள்ளிகளுக்கும் கேடயங்கள் வழங்கப்பெறுகின்றன.
தோ.தெ.திருமலை நினைவு பரிசுகள் & விருதுகள் வழங்கும் விழா, சென்னை தி.நகர், தக்கர் பாபா வித்யாலயத்தில் 26.10.2009 அன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்வுக்கு, புகழ்மிகு காந்தியத் தலைவர் பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தலைமை வகிக்கிறார்; மாணவர்களுக்குப் பரிசுகளையும் வழங்குகிறார்.
இந்த நிகழ்வில் குறும்பட இயக்குநர் பி.சிவகுமார், தக்கர் பாபா வித்யாலயத்தின் செயலாளர் வி.கே.ஸ்தாணுநாதன், சென்னை ஆன்லைன் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியர் அண்ணாகண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.
இந்த நிகழ்வுக்குக் காந்தி கல்வி மைய இயக்குநர் அ.அண்ணாமலை, தலைவர் என்.டி.இராதாகிருஷ்ணன், செயலாளர் எஸ்.பாண்டியன் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.
விழா அழைப்பிதழ்
பரிசு பெறும் மாணவர்களும் பள்ளிகளும்
அனைவரும் வருக.
Posted by அண்ணாகண்ணன் at 6:51 PM 0 comments Links to this post
Labels: கல்கி, காந்தி, நிகழ்வுகள், மாணவர்கள்
Monday, October 12, 2009
உறவுகள் வளர்க்கும் உன்னத இணையம்
எனது தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் (2009 அக்.5 முதல் 11 வரை) 20 இடுகைகளை இட்டுள்ளேன். இந்த ஒரு வார காலத்தில் மூவாயிரத்திற்கு மேலானோர் வந்துள்ளதாகக் கூகிள் ஆட்சென்ஸ் கூறுகிறது. இந்த இடுகைகளுக்கு இதுவரை சுமார் 70 பின்னூட்டங்கள் வந்துள்ளன.
என் வலைப்பதிவுகளில் அவ்வப்போது எழுதி வந்தேன். வேறு இணைய தளங்களில் எழுதியதை என் வலைப்பதிவில் பல முறைகள் மீண்டும் பதிந்துள்ளேன். புதிது புதிதாக எழுதுவதற்கு ஒரு புறத் தூண்டுதல் தேவையாக இருந்தது.
இந்நிலையில் தமிழ்மணத்தின் நட்சத்திர அழைப்பு வந்தது, எனக்குள் மீண்டும் எழுதும் ஆர்வத்தைத் தூண்டியது. ஏற்கெனவே எழுதியதை எடுத்து மீண்டும் வெளியிடாமல் புதிதாக எழுத வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த இடுகைகளை எழுதினேன்.
எனக்குள் ஊறும் யோசனைகள் பலவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுள்ளேன். இப்படியான ஒரு முகம் எனக்கு உண்டு என்பதைப் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆயினும் சிபியில் பணியாற்றிய போது, தினந்தோறும் ஏதேனும் புதிய புதிய யோசனைகளை அங்குள்ள நண்பர்கள் சிலரிடம் தெரிவித்தது உண்டு. என் தொழில், துறை காரணமாக இந்தச் சிந்தனைகளைக் கண்டுபிடிப்புகளாக மாற்றும்வண்ணம் இவற்றில் முழு நேரத்தையும் செலவிடுவது கடினம். இந்த யோசனைகள் யாரையாவது உசுப்பிவிடும். அவர், இந்தச் சிந்தனையின் தொடர்ச்சியாக அந்தப் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்துவார் என நம்புகிறேன்.
என்னை இந்த வார நட்சத்திரமாக்கிய தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நன்றிகள். என்னை வாழ்த்தியும் என் இடுகைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்தும் பின்னூட்டங்கள் இட்ட அனைவருக்கும் நன்றி. தனி அஞ்சலிலும் மின் அரட்டையிலும் தொலைபேசியிலும் இந்த இடுகைகள் குறித்து மிகுந்த ஆர்வத்துடன் கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி. இன்னும் எழுதவேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன. உரிய தருணத்தில் அவற்றையும் பதிவேன்.
திருவாரூரில் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்னுடன் 10ஆம் வகுப்புப் படித்த ஹாஜா என்பவர், கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு , தமிழ்மணத்தில் என்னைப் பார்த்துவிட்டு, 09.10.2009 அன்று சிங்கப்பூரிலிருந்து தொடர்புகொண்டார். இதே போல் இதே பள்ளியில் என்னுடன் 11, 12 வகுப்புகள் படித்த ரவிசங்கர் என்பவர், என் ஏதோ ஒரு வலைப்பதிவைப் பார்த்துவிட்டு, 2006இல் சைப்ரஸ் நாட்டிலிருந்து தொடர்புகொண்டார். அவர் மூலமாக அதே வகுப்பில் உடன் படித்த பிரேம் என்ற நண்பருடனும் பேச வாய்ப்பு கிட்டியது. இணையத்தின் இந்த வலிமை, எண்ணி எண்ணிப் போற்றத்தக்கது.
பழைய நண்பர்கள் மட்டுமின்றி, இணையத்தின் மூலம் புதிய நண்பர்களும் கிடைப்பார்கள். புதிய கூட்டாளிகள் வாய்ப்பார்கள். புதிய உறவுகள் கிட்டும். யாருக்குத் தெரியும்? என் வாழ்க்கைத் துணைவியும் இங்கே கிட்டலாம். அன்போடும் பண்போடும் புன்னகை பூத்த முகத்தோடும் சைவ உணவினராகவும் உள்ள அவரை நீங்கள் எங்காவது பார்த்தால் எனக்குத் தனி மடலில் தெரிவியுங்கள் :-)
Posted by அண்ணாகண்ணன் at 12:42 AM 4 comments Links to this post
Labels: இணையம், நட்சத்திர வாரம், வலைப் பதிவுகள், வலைப்பதிவர்கள்
Sunday, October 11, 2009
யோசனை 6 - நடக்க நடக்க மின்சாரம்
நாம் 50 கிலோவோ, 100 கிலோவோ எவ்வளவு எடை இருந்தாலும் அதைத் தாங்குபவை நம் கால்கள். அந்தக் கால்களைத் தாங்குபவை காலணிகள். எனவே உடல் அழுத்தத்தின் மூலம் கிட்டும் ஆற்றலை மின் ஆற்றலாக மாற்ற முடியும் என்பது என் நம்பிக்கை. எனவே காலணிகளில் சில திருத்தங்களைச் செய்தால் அவற்றின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பது என் யோசனை.
இந்தப் பிரத்யேக காலணிகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தைச் சேகரிக்கவும் நான் யோசனை தெரிவித்தேன். அலுவலகத்திலும் வீட்டிலும் வாசலில் உள்ள மிதியடியில் இதற்கான அமைப்பினை உருவாக்க வேண்டியது. காலணியை அணிந்தவர், அந்த மிதியடியில் காலை வைத்துத் தேய்க்கும்போது அதிலிருக்கும் மின்சாரத்தை மிதியடி உள்ளிழுத்துக்கொள்ளும். பின்னர் அந்த மிதியடியிலிருந்து அது மின்கலனுக்கு மாறும். இதன் மூலம் அலுவலகங்களில் மின்சாரத்திற்கு ஆகும் செலவினைக் கட்டுப்படுத்த முடியும். இதற்கு ஏற்ற வகையில் அலுவலகமே ஊழியர்களுக்கு இத்தகைய காலணிகளை வழங்கலாம்.
இதனை 2008ஆம் ஆண்டில் சிஃபியில் பணியாற்றிய போது சிந்தித்தேன். உடன் பணியாற்றும் நண்பர்களிடத்திலும் விவரித்தேன். அவர்களும் மகிழ்ந்து பாராட்டினார்கள். ஆனால் அடுத்த ஓரிரு மாதங்களில் இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்பட அனைத்து முன்னணி நாளிதழ்களிலும் ஒரு செய்தி வெளியானது. நடப்பதன் மூலம் கிட்டும் ஆற்றலினால் மின்சாரம் தயாரிக்கும் காலணிகளை ஜப்பானில் ஒருவர் உருவாக்கி இருப்பதாக அந்தச் செய்தி கூறியது. உங்கள் யோசனையை ஒருவர் கருவியாக மாற்றிவிட்டார் என அவர்கள் தெரிவித்தார்கள்.
அந்தச் செய்தி இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
http://news.shoe-shop.com/news/2288/japan-developing-electricity-generating-shoes
என் யோசனையிலிருந்து அவர் செய்த ஒரே திருத்தம், காலணிக்குள் தண்ணீரை வைத்து, அழுத்தத்தின் மூலம் ஒரு சிறு டர்பைனைச் சுழலச் செய்து, அதன் மூலம் மின்சாரம் உருவாக்கியதே. இதன் மூலம் 1.2 வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். அதைக் கொண்டு ஒரு ஐபாடினை இயக்க முடியும் என அவர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாகப் பல்வேறு கோணங்களில் நான் யோசித்திருக்கிறேன். காலணிகள் மூலமாக மின்சாரம் உருவாக்குவது அதில் ஒன்று. இன்னொன்று, உருவாக்கிய பிரத்யேக தளங்களில் நடப்பதன் மூலமும் இதே போன்று அழுத்தத்திலிருந்து மின்சாரத்தினை உருவாக்க முடியும்.
உதாரணத்திற்கு நகரில் பல்வேறு பூங்காக்கள் உள்ளன. ஒவ்வொரு பூங்காவிலும் உள்ள நடைபாதைகளில் காலையிலும் மாலையிலும் நூற்றுக்கணக்கானோர் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள். இந்த நடைபாதையைப் பிரத்யேகமாக உருவாக்கினால், காலிலிருந்து கிடைக்கும் அழுத்தத்தின் மூலம் மின்சாரத்தை உருவாக்க முடியும்.
பூங்காக்களில் மட்டுமின்றி, கடற்கரைகளிலும் இத்தகைய சிறப்பு நடைபாதைகளை உருவாக்கலாம். சென்னை, தி.நகர், ரங்கநாதன் தெரு போன்ற நெரிசல் மிகுந்த சாலைகளிலும் இவற்றை உருவாக்கலாம். Pedestrian Crossing எனப்படும் சாலைகளின் பாதசாரிகள் கடக்கிற பகுதிகளிலும் இவ்வாறு அமைக்கலாம். கட்டடங்களின் படிக்கட்டுகளை இவ்வாறு அமைக்கலாம். இதன் மூலம் உறுதியாக மின்சாரத்தினை உருவாக்க முடியும் என்பது என் நம்பிக்கை.
இது, ஒரு வகையில் காந்திய வழிமுறையாகும். கைராட்டையைக் கொண்டு தமக்குத் தேவையான ஆடையை ஒருவர் உருவாக்கிக்கொள்ள முடியும் என அவர் செய்து காட்டினார். அதே போன்று நடப்பதன் மூலம் ஒருவர் தமக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என நான் சிந்திக்கிறேன்.
காலணிகள், நடைபாதைகளில் இவற்றைச் செய்ய முடியுமானால், இருக்கைகளில் நாம் அமர்கிறோமே, அவற்றிலிருந்தும் மின்சாரத்தை உருவாக்க முடியுமா? ஆம், நிச்சயமாக முடியும். ஆனால், நம்மை விடப் பலரும் வேகமாக இருக்கிறார்கள். பாருங்கள்:
Shock-absorbable electricity-producing apparatus
Posted by அண்ணாகண்ணன் at 6:55 PM 1 comments Links to this post
Labels: கண்டுபிடிப்புகள், நட்சத்திர வாரம், யோசனைகள்
இணையத்தில் முத்திரை பதிக்கும் தமிழர்கள்
2008ஆம் ஆண்டு தமிழ் பிரவாகம் இணையக் குழுமத்தின் ஆண்டு விழாவில் அப்துல் ஜப்பாருடன் இணைந்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 'இணையத்தில் முத்திரை பதிக்கும் தமிழர்கள்' என்ற பொருளில் உரையாற்றினேன். அந்தத் தொகுப்பில் பின்னர் மேலும் சிலரையும் சேர்த்தேன். அந்த உரையின் சுருக்க வடிவம் இங்கே:
வரலாற்றில் நாம் வாழும் இந்தக் காலமானது, தமிழுக்கு மிகப் பெரிய பொற்காலம் என்பேன். இது வரையான காலக்கட்டத்தில் இப்போதுதான் நான்கில் மூன்று பேர் எழுத்தறிவு பெற்றவர்களாய் இருக்கிறார்கள். தமிழ்த் தரவுகள் வேறு எப்போதையும் விட இப்போதுதான் மிக அதிகமாகச் சேமிக்கப்படுகின்றன. அச்சிதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையம், திரைப்படம்.... என இவ்வளவு அதிகமான ஊடகப் பரவல், வரலாற்றில் இப்போதுதான் முதன்முதலில் நிகழ்ந்துள்ளது. நுணுக்கமான பற்பல துறைகள் தோன்றியுள்ளன. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியினால் இலட்சக்கணக்கான புதிய கருவிகள் பிறந்துள்ளன. இவற்றினால், தமிழர்கள் தங்கள் ஆளுமையை உலகம் முழுவதும் நிலைநிறுத்தி உள்ளார்கள்.
இந்தப் பின்னணியில் இணையத்திலும் தமிழர்கள் முத்திரை பதித்து வருகிறார்கள். அவர்களுள் சிலரை இங்கு எடுத்துக் காட்டுவதில் மகிழ்கிறேன்.
தமிழில் தனித்துவமான முதல் முயற்சிகள்:
* நா.கோவிந்தசாமி (இணையத்தில் தமிழைக் கொணர்ந்தவர்)
* கிருஷ்ணமூர்த்தி (பொன்விழி ஓசிஆர், பொன்பென் - கையெழுத்து உணரி உள்ளிட்ட கருவிகள்)
* கணேஷ்ராம் (செல்பேசியில் நூலகம், இதர செல்பேசிச் சேவைகள்)
* கணேஷ் பத்மநாபன் (http://www.voicesnap.com)
* சந்தோஷ் தொட்டிங்கல் (எழுத்திலிருந்து குரலுக்கு மென்பொருள்)
* ஏ.ஜி.ராமகிருஷ்ணன் (எழுத்திலிருந்து குரலுக்கு மென்பொருள்)
* விஜயதீபன் (தாயம், பல்லாங்குழி ஆகியவற்றைக் கணினியில் விளையாடும் வழியில் ஆக்கியவர்)
* நாகராஜன் (இணையவழியில் இலவசக் கல்வி)
* பத்ரி சேஷாத்ரி (ஒலி நூல்கள் உருவாக்கியவர்)
* காசி ஆறுமுகம் (தமிழ்மணம்.காம் - திரட்டி)
* ஆமாச்சு (கட்டற்ற மென்பொருள்கள்)
தமிழில் மின்னாக்கம்:
* கல்யாணசுந்தரம் குழுவினர் (மதுரைத் திட்டம்)
* நா.கண்ணன் குழுவினர் (தமிழ் மரபு அறக்கட்டளை)
* கோ.சந்திரசேகரன் (சென்னை லைப்ரரி.காம் - தமிழ் நூல்கள் மின்னாக்கம்)
* பொள்ளாச்சி நசன் (1000க்கும் மேற்பட்ட மின்னூல்கள் ஆக்கியவர் - ஆங்கிலம் வழி தமிழ் கற்பிப்பவர்)
* நூலகம்.ஆர்க் குழுவினர் (http://noolaham.org)
* மறவன்புலவு க.சச்சிதனந்தன் (தேவாரம்.ஆர்க், தமிழ்நூல்.காம்)
தமிழில் எழுதி, எழுத்துரு மாற்றிகள்:
* சுரதா யாழ்வாணன் (பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றி)
* விஸ்வநாதன் (அழகி - ஆங்கில ஒலிபெயர்ப்புவழி தமிழ்த் தட்டச்சு)
* முகுந்தராஜ் (இ-கலப்பையில் பங்களித்தவர்)
* ஹாய் கோபி (எழுத்துரு மாற்றி, பல்வகை தமிழ் மென்பொருள்கள்)
* சர்மா (ஃபிரெஞ்சு - தமிழ் அகராதி, பல்வகை தமிழ் மென்பொருள்கள் )
* நாகராஜன் (என் எச் எம் எழுதி, எழுத்துரு மாற்றி)
அரசு சார்ந்து இயங்குபவர்கள்:
* எல்காட் குழுவினர் (http://www.elcot.in)
* தமிழ் இணையப் பல்கலைக் குழுவினர் (http://tamilvu.org)
* தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை (http://www.textbooksonline.tn.nic.in)
* தமிழகச் சுற்றுலாத் துறை (http://www.tamilnadutourism.org/virtualtour/index.html)
* தமிழகப் பத்திரப் பதிவுத் துறை (http://www.tnreginet.net)... உள்ளிட்ட துறைகள்.
தனி நபர்களுடன் அரசுத் துறைகளையும் குறிப்பிடக் காரணம், அவற்றின் முயற்சிகள், வலுவான பயன்களை அளித்துள்ளமையாலேயே.
மேலும் பலரும் இருப்பினும் என் நினைவில் இப்போது உள்ள சிலரை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன். தமிழ் இணையத்தில் இயங்கும் பலரும் ஏதோ ஒரு வகையில் ஆக்கபூர்வமான பங்களிப்புகளை அளித்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் நான் பெரிதும் போற்றுகிறேன். வாழ்த்துகிறேன். நன்றி பாராட்டுகிறேன். அவர்களின் முயற்சிகளால் தமிழ், பல மடங்குகள் முன்னேறியுள்ளது என உறுதியாக நம்புகிறேன். இந்த முயற்சிகள் நீளட்டும். இவர்களைப் பார்த்து மேலும் பலரும் இந்தத் திசையில் பயணிக்கட்டும். ஒவ்வொருவரிடமிருந்தும் புதுமைகள் உதிக்கட்டும்.
இவர்களின் உதவியோடு, 100% எழுத்தறிவு; கல்வியில் உயரிய நிலை; பண்பாட்டில் செழுமை, தகவல் தொடர்பில் முதலிடம், அறிவியல் - நுட்பங்களில் அகிலம் வியக்கும் புத்தாக்கம், வரலாற்றுப் பதிவுகளில் கூர்மை, வாழ்க்கைத் தரத்தில் உன்னத நிலை, பன்னாட்டு உறவில் புதிய அத்தியாயம், மக்களாட்சிப் பண்புகளை மதிக்கும் பக்குவம்.... ஆகிய இலக்குகளை விரைவில் எட்டுவோம்.
Posted by அண்ணாகண்ணன் at 2:09 PM 13 comments Links to this post
Labels: இணைய தளங்கள், இணையம், கண்டுபிடிப்புகள், நட்சத்திர வாரம்
பிறந்த நாள் கொண்டாடுவது எப்படி?

தமிழ்நாட்டில் பிறந்த நாள் கொண்டாடுவது, மெழுகுவத்திகளை அணைத்து, கேக் வெட்டுவதுதான் என்பது போல் ஒரு பொதுவான நியதி ஆகிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. கடந்த பல ஆண்டுகளாக நான் கண்டுவரும் ஒரு காட்சி இது. கொஞ்சம்கூட மாறவில்லை. ஒவ்வொரு பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் கொண்டாடுபவர் மாறுவார். அவரின் புத்தாடை மாறியிருக்கும். ஆனால் இந்த கேக் வெட்டுவது மட்டும் மாறாது. அந்த கேக்கில் அவரின் பெயர் வரையப்பட்டிருக்கும். அதுவும் ஆங்கிலத்தில். கேக் வெட்டும்போது Happy birth day to you என்ற பாடலைப் பாடுவார்கள். மெழுகுவத்தியை அணைப்பார். கத்தியை எடுத்து கேக்கை வெட்டுவார். அதைத் தன் அன்புக்கு உரியவருக்கு ஊட்டுவார். அல்லது சிலர் அவருக்கு ஊட்டுவார்கள்.
நிறுவனங்களில் மட்டுமின்றி, கிறிஸ்தவ வீடுகளில் மட்டுமின்றி, சாமானியர் வீடுகளிலும் இந்த நடைமுறை புகுந்துள்ளது. பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஒருவரை அழைக்கிறீர்கள் என்றால், அவர் கேட்பது 'எத்தனை மணிக்கு கேக் வெட்டுறீங்க?' என்பதைத்தான். 'நேத்து எங்க வீட்டுப் பையனுக்குப் பிறந்த நாள் கொண்டாடினோம்' என யாரிடமாவது சொன்னால், உடனே, 'அப்படியா, கேக் எல்லாம் வெட்டினீங்களா?' என்றுதான் கேள்விகள் அமைகின்றன. தமிழரின் பிறந்த நாள் கொண்டாட்டம், கேக் வெட்டுவதுதானா?
முன்பு வீடுகளில் இனிப்பு தயாரித்து வழங்குவர்; பாயசம் செய்து பரிமாறுவர்; பெரியவர்களிடம் ஆசி பெறுவர்; ஆலயங்களுக்குச் செல்வர்; அன்ன தானம் செய்வர்; பெரிய செல்வந்தர்கள் வேறு பல தானங்களும் செய்வர்; ஏதேனும் திரையரங்குக்கோ, சுற்றுலாத் தலத்திற்கோ செல்லுவர்; அன்பளிப்புகள் வழங்குவர்.
ஆனால், இப்போது பெருகியுள்ள இந்த கேக் கலாசாரத்தில் மது அருந்துவதும் புகை பிடிப்பதும் ஆபாச நடனங்களும் பெரிய உணவு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று விருந்து அளிப்பதுமாக உடல்நலக் குறைவும் ஆடம்பரமும் காலூன்றி வருகிறது. 'என்ன மச்சி, பார்ட்டி எப்போ?' எனக் கேட்கிற நண்பர்கள், 'பார்ட்டி'யின் போது முட்ட முட்டக் குடித்துவிட்டு, அத்துடனே வாகனத்தை ஓட்டி, விபத்தில் உறுப்புகளையும் உயிரையும் இழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
கேக் வெட்டியபின் சுற்றியுள்ள நண்பர்கள், அந்த கேக்கை எடுத்து, பிறந்த நாளுக்கு உரியவரின் முகத்திலும் தலையிலும் தேய்த்துவிடுகிறார்கள். இப்படித்தான் தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்களாம். எவ்வளவோ ஏழைகள் பசித்திருக்க, கடவுள் சிலைக்குப் பாலபிஷேகம் செய்வதற்கும் இதற்கும் வேறுபாடு இல்லை. உணவுப் பொருளை எந்த வடிவில் வீணடித்தாலும் அது கண்டிக்கத்தக்கதே.
காதல் ஜோடிகள், ஒருவர் முகத்தில் இன்னொருவர் கேக்கைத் தடவி, பின்னர் தங்கள் நாவால் அதைத் துடைத்து உண்பது என்பதை என்னால் ஒரு வகையில் புரிந்துகொள்ள முடிகிறது. அதில் உள்ள பயனே, இன்பமே வேறு. இப்படி நண்பர்கள் கேக்கைத் தடவிவிடுவதால் என்ன பயன்? சிலர், சட்டையிலும் தேய்த்து விடுகிறார்கள். அதைத் தூய்மைப்படுத்துவது இன்னொரு சிக்கல்.
வெகு சிலரே அநாதை இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவற்றுக்குச் சென்று அவர்களுக்கு இனிப்பு வழங்குகிறார்கள். ஒரு பொழுது உணவை வழங்குகிறார்கள். அல்லது அதற்கான செலவை ஏற்றுக்கொள்கிறார்கள். இன்னும் சிலர், மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை, வேலை வாய்ப்புப் பயிற்சி, தொழிற்கருவிகள் வழங்குதல்.... எனப் பல நற்பணிகளையும் ஆற்றுகிறார்கள். நம்மால் முடிந்த வரை, இப்படி பிறந்த நாள்களைக் கொண்டாடினால், நல் உள்ளங்கள் மகிழ்ந்து வாழ்த்துமே.
==========================
படத்திற்கு நன்றி: http://www.theinsider.com
Posted by அண்ணாகண்ணன் at 11:09 AM 3 comments Links to this post
Labels: நட்சத்திர வாரம், பொது, விமர்சனம்
விபேகேஷ்: இணையவழி வர்த்தகத்தில் ஒரு புதிய முயற்சி

ஒரு பொருளை வாங்கும்போது அல்லது சேவையைப் பெறும்போது நாம் செலுத்திய தொகையில் ஒரு பகுதியை நமக்கே திரும்பத் தருகிறார்கள். விபேகேஷ் (http://www.vpaycash.com) இணையதளத்தில்தான் இந்தப் புதுமை. இந்த மொத்த திட்டமும் இணையம் வழி பணம் செலுத்திப் பொருள் வாங்கும் வாடிக்கையாளருக்கு கமிஷன் தொகையைத் திருப்பி அளிப்பதை அடிப்படையாகக் கொண்டது.
2007இல் இணையம் வழி வர்த்தகம், ரூ.10 ஆயிரம் கோடிக்கும் மேல் நிகழ்ந்துள்ளது. இதில் போக்குவரத்துக்கு மட்டும் ரூ. 7,040 கோடி வர்த்தகம் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள தொகை, இதர வகைகளில் செலவிடப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையைப் பொறுத்த அளவில் 6% மதிப்பிலான பணத்தை கமிஷன் தொகையாகத் திரும்பப் பெற முடியும். அந்த வகையில் விபேகேஷ் (Vpaycash) மூலம் இந்த வர்த்தகம் நடைபெற்றால் ரூ.422.4 கோடி ரூபாய்களை வாடிக்கையாளரால் திரும்பப் பெற முடியும். இதர துறைகளில் சராசரியாக 10% மதிப்பிலான பணத்தைக் கமிஷன் தொகையாகத் திரும்பப் பெற முடியும். அந்த வகையில் ரூ.300 கோடியைத் திரும்பப் பெறும் வாய்ப்பு உள்ளது. ஆக மொத்தம் ஆண்டுக்கு ரூ.700 கோடிக்கும் மேலான தொகையைத் திரும்பப் பெற வாய்ப்புள்ளது.
விபேகேஷ் (Vpaycash) இணையதளம், இந்தியாவிலும் இங்கிலாந்திலும் உள்ள நிறுவனங்களை முதலில் தம் தளத்தில் சேர்த்து வருகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 300 இணைய வழி வர்த்தக நிறுவனங்கள், விபேகேஷின் பட்டியலில் உள்ளன. ரீடிஃப் ஷாப்பிங், ஜெட் ஏர்வேஸ், ஷாப்பர்ஸ் ஸ்டாப், யாத்ரா, மேக் மை டிரிப், சூரத் டையமண்ட்ஸ், இந்தியா டைம்ஸ், 10பைசா.காம், A1Books India, Travelocity, Travelguru, Bharti Airtel Ltd, Cleartrip, ICICI Lombard Motor Insurance, Indiavarta.com, Kotak Mahindra Bank Ltd, Monginis Foods Private Limited, Monster India, Tata Sky, yourbillbuddy.com, Big Flix, TopperLearning உள்ளிட்ட நிறுவனங்களின் சேவையை விபேகேஷ் மூலம் பெறலாம். மேலும் பலரையும் இணைக்க முயன்று வரும் விபேகேஷ் (Vpaycash), 2009, ஜூன் 27 அன்று தன் சேவையைத் தொடங்கியது.
விபேகேஷ், வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு பணத்தைத் திரும்பத் தருகிறது?
இணையதள வர்த்தக நிறுவனங்களுக்கு விபேகேஷ் (Vpaycash) மூலம், வாடிக்கையாளரின் வரத்து அதிகரிக்கும். இந்த வாடிக்கையாளர் வரத்துக்காக வர்த்தக நிறுவனங்கள் கமிஷன் தொகை அளிக்கும். அந்த கமிஷன் தொகை முழுவதையும் (100%) விபேகேஷ் (Vpaycash), வாடிக்கையாளருக்கே திருப்பி அளித்துவிடும்.
இந்தக் கமிஷன் தொகையை ஈட்ட, வாடிக்கையாளர் விபேகேஷ் (http://www.vpaycash.com) இணையதளத்தில் உறுப்பினராகச் சேர வேண்டும். அதன் பிறகு இணையதளத்தில் அவர் பெயரில் உள்நுழைந்து அங்கு பட்டியலிடப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்களின் பெயரைச் சொடுக்கி, பொருளை / சேவையைப் பெற வேண்டும். விபேகேஷ் (Vpaycash) இணையதளத்தில் உறுப்பினராகச் சேருவதற்குக் கட்டணம் எதுவும் இல்லை.
ஆண்டிற்கு ஒரு முறை விபேகேஷ் (Vpaycash) ரூ.499/- மட்டும் சேவைக் கட்டணமாக, வாடிக்கையாளர் சம்பாதித்த தொகையிலிருந்து எடுத்துக்கொள்கிறது. மீதித் தொகையை அவரது வங்கியில் உள்ள சேமிப்புக் கணக்கில், ரிசர்வ் வங்கி பரிந்துரைக்கும் NEFT Transfer மூலம் அல்லது காசோலை அல்லது Paypal, இதில் வாடிக்கையாளர் எந்த வகையை விரும்புகிறாரோ அந்த வகையில் அவருக்குக் கொடுக்கப்படுகிறது.
வாடிக்கையாளர் ஆண்டு முழுவதும் எந்தத் தொகையையுமே இணையதள வழியாகச் சம்பாதிக்கவில்லை என்றால் அவர் விபேகேஷூக்கு (Vpaycash) எந்த வகையிலுமே பணம் செலுத்த வேண்டியதில்லை. இந்த வசதியின் காரணமாக, வருவாய் ஈட்டினால் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். விபேகேஷ் (Vpaycash), தனக்கு வரும் 100% கமிஷன் தொகையையும் வாடிக்கையாளருக்கே திருப்பி அளிக்கிறது. இதில் பணம் ஈட்டக்கூடிய மறைமுக வருவாய் வாய்ப்பு ஏதும் இல்லை என்பதால் தான் இந்தச் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்கிறார் இந்தத் தளத்தைத் தொடங்கியுள்ள ந. சங்கர்.
இணைய வாசி ந. சங்கர், இலண்டனில் வசிக்கும் இந்தியர். இவர், விபேகேஷ் இணையதளத்தை நடத்தி வரும் ஈவே இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. இவர், இங்கிலாந்தில் இணையம்வழி பொருள்களையும் சேவைகளையும் பெற்று வந்தார். அவர், தாம் பெற்ற அனுபவத்தை இந்திய மக்களும் பெற வேண்டும் என விரும்பி, இந்தத் திட்டத்தைச் சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் கார்ப்பரேட்டுகள் போன்ற பெருநிறுவனங்களும் வருவாய் ஈட்ட முடியும். இதன் மூலம் நிறுவனங்கள் தங்கள் இணையவழிச் செலவினத்தில் 10% தொகையைச் சேமிக்க முடியும். அத்துடன் ஏராளமான காகிதப் பணிகள், ஒப்பந்தப் புள்ளிகள் கோருதல், நுகர்வோரின் வேலைப் பளு ஆகியவற்றையும் சேமித்துக் கூடுதல் ஆதாயம் அடையலாம்.
விபேகேஷ் தொடக்க விழாவில் பேசிய சென்னை காவல் துறை இணை ஆணையர் மு.ரவி ஐ.பி.எஸ்., "விபேகேஷ் இணையதளத் திட்டத்தின்படி மாதம் 2 ஆயிரம் ரூபாய்க்குப் பொருள் வாங்குவோர் கூட மாதம் ரூ. 100 சேமிக்கலாம். வருடத்திற்கு ரூ.1200 சேமிக்கலாம். மிக அற்புதமான சேவை" என்று பாராட்டினார்.
இந்த இணையதளத்தைத் தொடங்கிவைத்த காவல் துறை டி.ஜி.பி., ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ்., பேசுகையில், "விபேகேஷ் மூலம் பணம், நேரம், சக்தி, எரிபொருள் ஆகியவை மிச்சமாகின்றன. ஷாப்பிங் செல்வதே ஒரு பொழுதுபோக்கு போல் ஆகி வருவதால், சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாநகரத்தை நிர்வகிக்கவும் பராமரிக்கவும் அரசுக்கு உள்ள சிரமங்களைக் குறைக்கவும் இத்தகைய இணையதளங்கள் உதவும்" என்றார்.
இந்தத் தளத்தைத் தொடங்கியுள்ள ந.சங்கரை அண்மையில் சென்னையில் சந்தித்து உரையாடினேன். இந்தத் தளத்தின் தொடக்க விழாவிலும் பங்கேற்றேன். சாதாரணமாகக் கடையில் சென்று ஒரு பொருளை வாங்குவதைவிட அதே பொருளை இணையத்தின்வழி பெற்றால், அதனால் 10% தொகை குறையுமானால், இது, இணையப் பயன்பாட்டை ஊக்குவிக்குமே! இணையவாசிகளே, இந்தத் தளத்தைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
Posted by அண்ணாகண்ணன் at 9:52 AM 0 comments Links to this post
Labels: இணைய தளங்கள், இணையம் வழி வர்த்தகம், நட்சத்திர வாரம்


